ஓம் சிவ சிவ ஓம் மந்திரத்தின் தோற்றம்

ஓம் சிவ சிவ ஓம் மந்திரத்தின் தோற்றம்

சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
சிவ சிவ என்றிட தீவினைமாளும்
சிவ சிவ என்றிட தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே.

இது திருமூலர் சித்த தெய்வத்தின் திருமந்திரம். இதை அனைவரும் அறிவர். இதில் சிவ சிவ என்பது சிவநெறி செல்வர்களால் பெருமையாக அழைக்கப்படும் காரணப் பஞ்சாட்ரம் ஆகும்.

நமசிவய – ஸ்தூல பஞ்சாட்சரம் (உடல் திருவைந்தெழுத்து)

சிவயநம – சூட்சும பஞ்சாட்சரம் (உயிர் திருவைந்தெழுத்து)

சிவய சிவ சிவ – அதிசூட்சும பஞ்சாட்சரம் (கடி உயிர் திருவைந்தெழுத்து)

சிவ சிவ – காரண பஞ்சாட்சரம் (தோற்ற திருவைந்தெழுத்து)

மேற்கண்ட திருமந்திரத்தின் பொருள்:-
******************************************
தீவினையாளர் (பாவம் செய்தவர்கள்) சிவ சிவ என்று செபிக்க மாட்டார்கள், செபிக்கமுடியாது. அவரவர் செய்த தீவனைகள் செபிக்கவிடாமல் தடுக்கும். அவ்வாறு செபித்து வந்தால் தீவினைகள் யாவும் (மூட்டை மூட்டையாக இருந்தாலும்) அழிந்து போகும். தீவினைகள் அகன்றால் பிறவி நிலையில் மேன்மை பெற்று மனிதப்பிறவியிலிருந்து தேவராக (சிவகணமாக) மாறமுடியும். அவ்வாறு மேன்மை பெற்று சிவகணமாகி முக்தி பெற்று சிவகதியை (சிவனுள் ஒடுங்குதல் – பிறவியிலா பெருநிலை) அடையமுடியும்.

இது சிவ சிவ என்ற மந்திரத்தின் விளக்கம் மட்டுமே. ஒவ்வொரு சித்தர்களுக்கும் மூலமந்திரங்கள் உண்டு. அவையாவன:-

1. நந்தீசர் —— சும்

2. போகர் —— சம்

3. அகத்தியர் —— ஞாம்

4. கொங்கணர் ——- ணம்

5. சட்டைமுனி ——- டம்

6. சுந்தரானந்தர் —— நம்

7. ராமதேவர் ——- தம்

8. கருவூரார் —— பம்

9. பிரம்மமுனி —— மம்

10. ரோமர் —— ரம்

11. மச்சமுனி —— யம்

12. புண்ணாக்கீசர் —— வம்

13. இடைக்காடர் ——- லம்

14. கோரக்கர் ——- ளம்

15. வாசமுனி ——- றம்

16. கமலமுனி —— ழம்

17. அழுகண்ணி சித்தர் —— னம்

18. திருமூலர் —— ஓம்

இம்மூலமந்திரங்களில் திருமூலர் சித்த தெய்வத்தின் மூலமந்திரம் ஓம் ஆகும்.

ஓம் சிவ சிவ ஓம் :-
*********************
ஓம் — ஓரெழுத்து மந்திரம் (இரு முறை) — இரு எழுத்துக்கள்

சிவ — ஈரெழுத்து மந்திரம் (இரு முறை) — நான்கு எழுத்துக்கள்

ஆக மொத்தம் ஆறு எழுத்துக்கள் (சிவம் – 5 + சக்தி – 1). சிவனும், சக்தியும் சம அளவில் கலந்த அற்புத மந்திரம் தான் ஓம் சிவ சிவ ஓம். சிவ சிவ – சந்நியாசிகளுக்கு மட்டுமே உரித்தானது (சிவ தத்துவம் மட்டும் தனித்திருப்பது). ஓம் என்ற மந்திரமே அனைத்து மந்திரங்களுக்கும் சக்தி தருவது. சக்தியின் வடிவுடையது. ஆதிசக்தியை குறிப்பது. ஓம் சிவ சிவ ஓம் — இல்லற நெறியாளர்களுக்கு உகந்தது (சிவ சக்தி தத்துவமானது). சிவசக்தி தத்துவமே குமரக்கடவுள் (ஆறுமுகம் – ஆறு எழுத்துக்கள்). சிவசக்தி வடிவமே உலக தத்துவம். இதுவே லிங்க யோனி தத்துவம். சிவனும் சக்தியும் இணைந்தால் தான் உலக இயக்கம்.

திருமூலரின் மூலமந்திரம் – ஓம்

திருமூலர் அருளிய மந்திரம் – சிவ சிவ

இதை சம அளவில் சேர்ப்பதால் கிடைப்பதே ஓம் சிவ சிவ ஓம்.

தமிழ் மெய்யெழுத்துக்கள் — 18
சித்தர் ஏடுகளில் கூறப்பட்ட சித்தர்களின் மூலமந்திரங்கள் — 18

அவற்றுள் முதல் (சும் — நந்தீசர்) மற்றும் கடைசி (ஓம் — திருமூலர்) இவற்றை நீக்கி கம் மற்றும் ஙம் இவற்றை சேர்க்க கிடைப்பது உயிர்-மெய் வரிசை (கம், ஙம், சம்,…….,னம்) மொத்தம் – 18. இவற்றில் புதிதாக சேர்க்கப்பட்ட மூலமந்திரம் — கம் (கணபதியின் மூலமந்திரம்). கணபதியும் ஒரு சித்தர் தாம். அவரது சமாதி இமயமலை சாரலில் உள்ளதாக படித்திருக்கிறேன். அவ்வாறெனில் ஙம் என்ற மந்திரம் ஆதி சித்தர் காகபுசுண்டர் சித்தர் பெருமானின் மூலமந்திரமாக தான் இருக்க முடியும்.

ஆறு ஆதார தியான மந்திரங்கள்:
*************************************
மூலாதாரம் — கணபதி — ஓம் சிவா
சுவாதிட்டானம் — பிரம்மா — நம் சிவ ஓம்
மணிபூரகம் — விஷ்ணு — மங் சிவ ஓம்
அநாகதம் — ருத்திரன் — சிங் சிவ ஓம்
விசுத்தி — மகேஸ்வரன் — வசி சிவ ஓம்
ஆக்ஞை — சதாசிவம் — யம் சிவ ஓம்

மேற்கண்ட ஆறு ஆதார தியான மந்திரங்களிலும் நம்முடைய ”ஓம் சிவ சிவ ஓம்” மந்திரம் ஒளிந்துள்ளது..

நன்றி -சித்தர்களின் குரல் shiva shangar
இறைவன் அருளால் ,
வாழ்க வளமுடன்.!
வளர்க அருளுடன்.!

*ஓம் நமசிவாய*

Share