உண்மையான குரு யார்? எப்படி இருப்பார்?

உண்மையான குரு யார்? எப்படி இருப்பார்?

உண்மையான குரு யார்? எப்படி இருப்பார்?

உண்மையான குரு தன்னை நாடி வந்தவர்களை ஞான நிலைக்கு உயர்த்தப் பார்ப்பார்.

அவர் தனக்குள் இருக்கும் கடவுளை உணர செய்வார். அவரிடம் படாகோபமும், பகட்டும் இருக்காது. பணிவும், எளிமையும் அவரிடம் இருக்கும்.கோப பட்டால் கூட அன்பாக மீண்டும் காரணத்தை எடுத்துரைப்பார்.

உண்மையான ஞானமே முக்கியமாக நினைப்பவரே உண்மையான குரு. அவர் தன்னைக் குருவாக ஏற்றுக் கொண்டவர்களை ஞான நிலைக்கு உயர்த்துவதில் குறியாக இருப்பார். ஜீவன் முக்தி மற்றும் எங்கும் நிறைந்த இறைவனோடு இணைய துடிக்கும் அன்பர்களுக்கு மட்டுமே உண்மையான குரு கிடைப்பார். ஐம்புலன்களை அடக்கி தனக்குள் பயனிக்கும் பாதையை காட்டி கொடுப்பார். சித்தர்கள் மற்றும் ராமலிங்க சுவாமிகள் போல் எல்லோரும் சொருப சமாதி
அடைய பாடுபடுவார்
தன்னை நாடி வருபவர்களுக்குப் பிடித்ததை மட்டுமே சொல்லி மகிழ்விக்கும் மனப்போக்கு உண்மையான குருவிடம் இருக்காது. உண்மை கசந்தாலும் அதை மருந்தாக உட்கொள்ள வைத்து நலமடையச் செய்யும் மகத்தான அக்கறை அவரிடம் இருக்கும்.

தன்னைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கையில் அவருக்கு அக்கறை இருக்காது. ஒருவர் பின்பற்றிநாளும் அவர் தன்னை போல மிக பெரிய ஞானம் பெற உதவுவார்.

சொத்துக்கள் சேர்ப்பது, ஆள்பிடிப்பது, சித்துவித்தைகள் செய்து காட்டுவது போன்றவை உண்மையான குருவிடம் இருக்காது. ஞானத்தைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கம் மட்டுமல்லாமல் ஒரு உதாரண புருஷராய் அவர் வாழ்ந்து காட்டும் பண்பு இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான குரு ஒரு ஆரம்பம்தான். அவர் முடிவு அல்ல. உண்மையான குரு என்பவர் ஒரு வாசல் தான். அடுத்த நிலைக்கு அவர் மூலம் ஒருவர் சென்று கடந்து போக முடியும். அவர் தன்னிடம் வந்த அனைவரும் குருவாக வேண்டும் என்பதிலே கவனமாக இருப்பார்

இதெல்லாம் இக்காலத்தில் உண்மையான குருவை அடையாளம் காண நமக்கு இருக்கும் அளவுகோல்கள். உண்மையான குருமார்கள் நம் சித்தர் வாசல்களிலும்,புராணங்களிலும், வேதங்களிலும், உபநிடதங்களிலும் எப்படி இருந்திருக்கிறார்கள் என்பதை ஆழமாகப் படிக்கும் போது நமக்குப் புலப்படும் உண்மைகள்

ஒரு குழந்தைக்கு அதன் தந்தையைக் காட்டுபவள் தாய். ஒரு சீடனுக்கு தனக்குள்ளே இறைவனை அடைய வழி காட்டுபவர் குரு.
இந்த ஞானத்தெளிவை அளிப்பவரே உண்மையான சத்குரு.

உண்மையான குருவின் உபதேசம் ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு மோர் விழுவது போலத் தான். அந்தக் குடத்தில் உள்ள பால் எப்படி இனி பாலாகவே இருந்து விட முடியாதோ அதே போல் அவரது சீடனும் முந்தைய அஞ்ஞான நிலையிலேயே தங்கி இருந்து விட முடியாது. அவரது உபதேசம் மிகப்பெரிய ஞான மாற்றத்தை அவனிடம் கண்டிப்பாக ஏற்படுத்தும்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழிவிழுமாறே.

என்று திருமூலர் எச்சரித்ததைப் போன்ற வேடிக்கையான காலகட்டத்தில் தான் நாம் இருக்கிறோம். அஞ்ஞானக் குருட்டுத் தனத்தை நீக்க முடியாத தகுதியற்ற குருவினைக் குருவாக ஏற்றுக் கொள்பவர்கள், அந்தக் குருட்டுத் தனத்தை நீக்க முடிந்த உண்மையான குருவினை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நடிப்பும், பகட்டும் பிடிப்பவனுக்கு நல்லதும், உண்மையும் பிடிக்காது. அது கசக்கவே செய்யும். இப்படி தகுதியும், ஞானமும் இல்லாத குருவும், முட்டாள் சீடனும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? ஞானமில்லாத இருவரும் குருடர்களே என்பதால் அவர்கள் குருட்டாட்டம் ஆடி கடைசியில் படுகுழியில் விழ வேண்டி இருக்கும்.
முன்பு குருவை எப்படி எல்லாம் பூஜிக்க வேண்டும் என்று சொன்ன அதே திருமூலர் பிற்காலத்தில் இப்படியும் குருக்கள் மழைக்காலக் காளான்களாய் முளைப்பார்கள் என்று ஞான திருஷ்டியில் உணர்ந்து பாடியது போல் அல்லவா இருக்கிறது.

சித்தர்கள் பாடலை அதிகமாக ஆய்வு செய்யுங்கள். உண்மையாக வாழுங்கள். கட்டாயம் அஞ்ஞான இருள் விலகும்.

ஓம் நமசிவாய ஓம்

Share