சிவராத்திரி ரகசியங்கள்

சிவராத்திரி ரகசியங்கள்

*சிவராத்திரி ரகசியங்கள்*

*(புராதன சித்த நூல்களில் அகத்தியர் பெருமானால் சொல்லப்பட்ட சிவராத்திரி பற்றிய அபூர்வ ரகசிய குறிப்புகள். )*

பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும். ஏனென்றால்,பல சதுர்யுகங்கள் முடிந்து,பல கல்பங்கள் முடிந்து,இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள்;ஆகவே,சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி.

ஆலமரத்தடியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி யோகத்தில் அமர்ந்திருப்பதற்குக் காரணமே சிவராத்திரி மகிமையை எடுத்துச் சொல்வதற்காகத்தான்;

திங்கட்கிழமையன்று சதுர்த்தசி திதி பகலும்,இரவும் 60 நாழிகைகள் சேர்ந்து வந்தால்,அது *யோக சிவராத்திரி* ஆகும்;அதாவது,யோகியர் மறந்திடாத சிவராத்திரி ஆகும்;

தை மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரியே *பட்ச சிவராத்திரி* ஆகும்;

ஒரு (தமிழ்)வருடத்திற்கு 12 மாதங்கள்! ஒரு மாதத்திற்கு இரண்டு சிவராத்திரிகள்! ஆக ஆண்டிற்கு 24 சிவராத்திரிகள்! அவை வளர்பிறை சதுர்த்தசி,தேய்பிறை சதுர்த்தசி ஆகும்;இது *நித்திய சிவராத்திரி* ஆகும்;

மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவுதான் *மகாசிவராத்திரி* ஆகும்;

மாதம் தோறும் வரும் சிவராத்திரியை மாதசிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது;
சிவராத்திரிகள் இப்படி ஐந்து விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன;ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும்,பஞ்சபூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன;

இவைகளில் ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும்;மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என விளக்குகிறார் சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை பூமிக்குக் கொண்டு வந்தருமான அகத்தியர்!!!

சிவராத்திரியன்று முதல் ஜாமப் பூஜையில் ரிக் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்;ரிக் வேதம் தெரியாதவர்கள் *ஓம் நமசிவாய* என்ற பஞ்சாட்சரத்தை ஜபிக்கவும்;இதனால்,ருத்ரம்,ரிக் வேதம்,சாம வேதம் சொன்ன பலன் கிடைக்கும்;

*ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்*
*ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின்*
*ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய்ப் புணர்ந்த பின்*
*ஓம் நமச்சிவாயமே உணர்ந்து உட்கலந்து நிற்குமே!*

வேதம் படித்தவன்,வித்தகம் படித்தவன்,ரிக் வேதங்களைப் பயின்றவன், அனைத்துப் பலனும் “ஓம் நமச்சிவாய” என்று பாடினால் கிட்டும்;

ஒரு மனிதன் சதுர்த்தசி திதியில் இயற்கையான முறையில் இறந்து,அமாவாசையன்று தகனம் செய்தால்,அந்த ஆன்மா சிவலோகத்தில் சிவகணமாக உயர்ந்த நிலையை அடைவார்;ஈசனை முழு முதற்கடவுளாக பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் இதைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை!

சில நேரங்களில் சிவராத்திரி திதி பகலிலும் வரும்;அப்படி வந்தால்,அந்த சிவராத்திரி பூஜையை பகலில்தான் செய்ய வேண்டும்;சதுர்த்தசி திதி நேரத்தில் தான் சிவராத்திரி வரும்;மதியம் வரை திரயோதசி திதி இருந்து,அதன் பிறகு,சதுர்த்தசி திதி துவங்கினால்,மதியத்திற்குள் உணவு உண்டுவிடவேண்டும்;மதியம் சதுர்த்தசி திதி ஆரம்பித்ததும்,சிவராத்திரி பூஜைகளைச் செய்ய வேண்டும்;சிவராத்திரி என்பது இரவில் தான் வரவேண்டும் என்பது அல்ல;

இந்த சிவராத்திரி பூஜையால் பெண்களுக்கு இழைத்த துரோகம்;பெண்களுக்கு செய்த சாபம்; பெண்களுக்கு இழைத்த கொடுமைகள் நீங்கும்;

அதே போல,ஒரு பெண் தனது கணவனுக்கு துரோகம் செய்திருந்தால்,தவறை உணர்ந்து திருந்தி,இந்த சிவராத்திரி பூஜையைச் செய்தால்,கணவனுக்கு செய்த துரோகம் மறைந்துவிடும்;

அனைத்து புண்ணியப் பலன் களையும் இந்த சிவராத்திரி பூஜை தந்துவிடும்;அறிந்து பாவங்கள் செய்திருந்தாலும்,அறியாமல் பாவங்கள் செய்திருந்தாலும் அனைத்து பாவங்களையும்,கர்மவினைகளையும் அழித்துவிடும் இந்த சிவராத்திரி பூஜை;

*மாத சிவராத்திரிகளில் சிவராத்திரி பூஜைகள் செய்தால் கிடைக்கும் புண்ணியப் பலன் கள்!!!*

சித்திரை மாதத்தில் வரும் இரண்டு சிவராத்திரிகளிலும் ஒருவன்/ஒருத்தி தனது ஆயுள் முழுவதும் செய்து வந்தால்,அங்கங்களின் குறைகள் நீங்கும்;உடலின் குறைகள் நீக்கப்பட்டு,ருத்திர கணங்கள் வந்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்;

வைகாசி மாதத்தில் வரும் இரண்டு சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால்,நாம் சாப்பிடுகின்ற மருந்து நம் உடலில் ஒட்டும்;சாப்பிடுகின்ற மருந்து உடலில் ஒட்டினால் தான் நம் நோய் நீங்கி ஆரோக்கியம் வரும்;

ஆனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால்,தேவதைகள் எல்லாம் நடனம் ஆடி நம்மை வணங்கி தேவலோகத்திற்கு அழைப்பார்கள்:

ஆடி மாதத்தில் வரும் இரு சிவராத்திகளில் பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால்,அம்பிகையுடன் சேர்ந்து சிவராத்திரி பூஜை செய்த பலன் கிட்டும்;

ஆவணி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜைகளை செய்தால் வேதம் ஓதிய பலன் கிட்டும்;பூணூல் அணிந்து வேதம் ஓதிய பலன் கிட்டும்;மேல் உலகில் வேதம் ஒதியவருக்கு கொடுக்கின்ற மதிப்பைக் கொடுப்பார்கள்:

புரட்டாசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் ஆயுள் முழுக்க பூஜை செய்தால்,செல்வம் பெருகும்;

ஐப்பசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் ஆயுள் முழுக்க பூஜை செய்தால்,நாம் என்றுமே பசியால் வாடித் தவித்து அலைய மாட்டோம்;வாழ்நாள் முழுவதும் பசியால் அவதிப்படமாட்டோம்;அதாவது உணவிற்காக என்றுமே கையேந்தி நிற்கும் நிலை வராது;
சிவபக்தன் என்று சொல்லிக் கொள்கின்ற ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டியது,

கார்த்திகை மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளிலும் பூஜைகள் செய்திடவேண்டும்;சிவராத்திரி விரதம் இருந்திடல் வேண்டும்;கார்த்திகை மாதத்து சிவராத்திரி பூஜையைப் பற்றி விவரிக்க ஒரு 100 ஆண்டுகள் போதாது;

மார்கழி மாதத்தில் வரும் இரு சிவராத்திரி பூஜையை ஆயுள் முழுக்க செய்தால்,பிறருக்காக தவறுகள் செய்ய மாட்டார்கள்:ஒரு மனிதன் அதுவரை செய்த அனைத்துவிதமான தவறுகளையும் அழிக்கின்ற சிவராத்திரி மார்கழியில் வரும் சிவராத்திரியாகும்;

தை மாதத்தில் வரும் இரு சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால்,நெல் முதலான தானியங்கள் நன் கு விளையும்;அள்ளி வழங்கிய தானப் பலன் கிடைக்கும்;

மாசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜையை மனைவி செய்தால்,பிற பெண்களை நாடும் கணவன் திருந்திவிடுவான்;கணவன் செய்தால்,பிற மாதரை நாடும் எண்ணத்தில் இருந்து நிச்சயம் மீண்டு வர முடியும்;

பங்குனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜை செய்தால்,சிவபெருமானின் பங்குனி உத்திர நடனத்தைக் காணும் அளப்பரிய பாக்கியம் கிடைக்கும்;பங்குனி உத்திர நடனத்தைப் பார்ப்பதற்கு 3 கோடி முறை மனிதப் பிறப்பு எடுத்து சிவசிந்தையோடு வாழ்ந்தால் தான் கிட்டும்;அதை ஒரே ஒரு பிறவி பங்குனி மாத சிவராத்திரி பூஜைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கிடைத்துவிடுகின்றன;

நமது பிறந்த நட்சத்திரமும்,சிவராத்திரியும் சேர்ந்து வரும் நாளில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தாலே போதும்;கலியுகத்தில் மானுடப் பிறவி எடுத்தமைக்கான லட்சியத்தை அடைந்துவிட்டதாக அர்த்தம்;

ஒருவேளை பிறந்த நட்சத்திரமும் சிவராத்திரியும் இணைந்து வராவிட்டாலும் கூட,பிறந்த கிழமையும் சிவராத்திரியும் இணைந்து வரும் நாளில் கூட சிவராத்திரி விரதம் இருந்து சிவபூஜை செய்வது மிகுந்த புண்ணியம் தரும்;

*நட்சத்திரமும் சிவராத்திரியும்*

அசுவினியும் சிவராத்திரியும்: இந்த நாளில் சிவராத்திரி பூஜை செய்தால்,அற்புதமான வேலை கிடைக்கும்;(உங்களுக்குப் பிடித்தமான வேலை கிடைக்கும்)

பரணியும் சிவராத்திரியும்:பெற்ற தாய்க்கு உத்தமமாய் கர்மம் செய்த பலன் களைக் கொடுக்கும்;

கார்த்திகையும் சிவராத்திரியும்:முருகக் கடவுளுடன் சேர்ந்து ஈசனைக் கண்ட பலனைக் கொடுக்கும்;

ரோகிணியும் சிவராத்திரியும்: திருமாலே நமக்கு வெண்சாமரம் வீசுவார்;

மிருகசீரிடமும் சிவராத்திரியும்: பசுவிற்கு உணவு இட்ட பலன் கிட்டும்;கோ பூஜை செய்த பலன் கிட்டும்;

புனர்பூசமும் சிவராத்திரியும்: மறுபிறவி(புனர் ஜன்மம்) எடுத்த பலன் கிட்டும்;

பூசமும் சிவராத்திரியும்: ஈசன் அருகே இருக்கக் கூடிய அனுக்கிரகம் கிட்டும்;

ஆயில்யமும் சிவராத்திரியும்:எவ்வளவு வேதனைகள் ஏற்பட்டாலும்,அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஈசனுக்கு திருப்பாதத் தொண்டு செய்யக் கூடிய மன நிலை கிட்டும்;

பூரமும் சிவராத்திரியும்:நோய்கள் அணுகாது;

உத்திரமும் சிவராத்திரியும்:லோபியாக(கஞ்சனாக) இருந்தாலும்,சாந்த நிலை அடைவார்;

சித்திரையும் சிவராத்திரியும்:தேவப் பிறவி கிட்டும்;

பூராடமும் சிவராத்திரியும்:யாரோடும் தேவையில்லாமல் நட்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள்;

சதயமும் சிவராத்திரியும்:சாத்திரமாய் இருப்பார்;

பூரட்டாதியும் சிவராத்திரியும்:தேவர்களே வணங்குவர்;

உத்திரட்டாதியும் சிவராத்திரியும்:கர்ப்பவாசத்தில் உழல மாட்டார்கள்;

ரேவதியும் சிவராத்திரியும்:இனி பிறவியே எடுக்க மாட்டார்கள்:

*கிழமையும் சிவராத்திரியும்*

திங்கள்:சோம்பேறியாகத் திரியும் பிறவி எடுக்க மாட்டார்கள்.சுறுசுறுப்பாக இருப்பார்கள்.கோவில் கட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கும்;

செவ்வாய்:அரசாங்க வேலை கிடைக்கும்;சட்டமன்ற உறுப்பினர்,பாராளுமன்ற உறுப்பினர்,மாநில அரசின் மந்திரி அல்லது மத்திய அரசின் மந்திரி பதவி கிடைக்கும்;(இப்பிறவியில் இப்பதவிகளில் இருப்பவர்கள் கடந்த ஐந்து பிறவிகளாக தொடர்ந்து இந்தக் கிழமையில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தவர்களே!!!)

புதன்:திருமாலை பார்த்த பலன் கிட்டும்;அதாவது,திருமால் சங்கு சக்கரத்துடன் சாம கானம் ஓத, காட்சி அளித்து ஆசி கொடுப்பார்;

வியாழன்: குரு கிட்டுவார்;குருவுடன் சேர்ந்து திருப்பணி செய்ய வாய்ப்பு கிட்டும்;சித்தர்கள் அனைவரும் ஆசி கூறுவார்கள்.

வெள்ளி;ஆத்மவிசாரம் செய்வார்கள்;தான் யார் என்பதை உணர வெள்ளிக்கிழமைகளில் வரும் சிவராத்திரியன்று பூஜை+விரதம் இருக்க வேண்டும்;
தான் யார்? என்பதை உணர்ந்தவர் ரமண மகரிஷி!
தான் என்பது எங்கே இருக்கின்றது? மனதிற்குள் இருக்கின்றது;தான் எங்கிருந்து வருகின்றது? இருதயத்தில் இருந்துதான் வருகின்றது.
வெள்ளிக்கிழமையும் சிவராத்திரியும் வரும் இரவில் தனியாக அண்ணாமலை கிரிவலம் வந்தால் ஆத்மவிசாரம்(நான் யார்? என்பதற்கான விடை) கிட்டும்;

சனி: சனிபகவானால் ஏற்படும் துயரங்கள் முழுமையாக விலகும்;ஆமாம்! சனிக்கிழமையன்று வரும் சிவராத்திரி விரதம்+பூஜை செய்தால் ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனியால் வரும் துயரம் சிறிதும் வராது;நெருங்காது;

ஞாயிறு: சூரியதேவனாகப் பிறக்கலாம்;சூரியப் பதவி கிடைப்பது என்பது மிகவும் அரிதிலும் அரிதான அதிசயம்;

*நற்றுணையாவது நமச்சிவாயமே*

Share