பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்
*திருவிளையாடல் புராணம்*
*பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்*
.
?மதுரை அருகில் குருவிருந்ததுறை என்ற தலம் (தற்போது குருவித்துறை) உள்ளது. இவ்வூரில் சுகலன் என்பவன் தன் மனைவி சுகலையுடன் வாழ்ந்து வந்தார். பெரும் பணக்காரர்களான இவர்களுக்கு 12 ஆண் குழந்தைகள். எல்லா குழந்தைகளும் மிகச் செல்லமாக வளர்க்கப்பட்டனர். இதனால், எல்லாரும் கெட்டுக் குட்டிச்சுவரானார்கள். காலப்போக்கில், சுகலனும், சுகலையும் இறந்துபோகவே, சொத்தை 12 பாகமாக பிரித்தெடுத்தனர். அவரவர் தங்கள் பங்கை செலவழித்து தீர்த்தனர். ஒரு கட்டத்தில் எல்லாம் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். பசி அவர்களை வருத்தியதால், காட்டில் போய் தங்கி, தினமும் மிருகங்களை வேட்டையாடி உணவருந்தினர்.
?ஒரு சமயம், இவர்கள் சென்ற வழியில் தேவகுரு பிரகஸ்பதி என்ற ஒரு துறவி தவத்தில் இருந்தார். அவர் யாரென்பதை அறியாத அந்த சகோதரர்கள் அவர் மீது மணலை வாரி இறைத்தனர, கற்களை வீசினர், அவரைச் சுற்றி நின்று ஆடிப்பாடி கேலி செய்தனர். அவர்களது இடைஞ்சலால் பிரகஸ்பதி தவம் கலைந்து எழுந்தார். மூடர்களே! நீங்கள் செய்த இந்த செயல் கண்டனத்துக்குரியது. படிப்பறிவில்லாதவன் கூட பிறரது தொழிலுக்கு இடைஞ்சல் செய்யும் உரிமையில்லாதவன். நீங்களோ, அமைதியாய் இருந்த எனக்கு இடைஞ்சல் செய்தீர்கள். எனவே, எல்லாரும் இந்தக் காட்டிலுள்ள பன்றியின் வயிற்றில் பிறப்பீர்களாக! என சாபம் கொடுத்தார்.
?அந்த சகோதரர்கள் இந்த சாபத்தை எதிர்பார்க்கவில்லை. தங்கள் தவறுக்கு பிராயச்சித்தம் கேட்டார்கள். குழந்தைகளே! உங்கள் மீது இரக்கம் கொள்கிறேன். ஆனால், தவறு செய்தவர்கள் தண்டனை அடைந்தே ஆக வேண்டும். பன்றிகளாகப் பிறக்கும் உங்களுக்கு சரியான உணவும் கிடைக்காது. பசியுடனேயே திரிவீர்கள். இறுதியாக, மதுரையில் உறையும் சோமசுந்தரரின் அருளால் உய்வடைவீர்கள். மேலும், தவறை உணர்ந்த உங்களுக்கு மன்னனின் அவையில் அமைச்சர் பொறுப்பும் கிடைக்கும், என்றார்.
?அந்த சகோதரர்கள் அங்கு சுற்றித் திரிந்த பன்றியின் வயிற்றில் பிறந்தனர். மன்னன் ராஜராஜன் அந்தக் காட்டிற்கு வேட்டையாட வந்தான். காட்டுப் பன்றிகளை அவன் வேட்டையாட எண்ணினான். ஆனால் காட்டுப் பன்றிகள் மனிதர்களைத் தாக்கும் திறனுடையவை. எனவே, அவை ஒட்டுமொத்தமாகக் கூடி மன்னனின் படையைத் தாக்கின. ஆனால், ஆண் பன்றிகளின் தலைமைப் பன்றியை மன்னன் கொன்று விட்டான். பின்னர், பெண் பன்றியின் தலைமையில் மற்ற பன்றிகள் போரிட்டன. பெண் பன்றியைக் கொல்வது தவறு என்பதால், மன்னன் ஒதுங்கிக் கொண்டான். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான் அங்கு வந்த ஒரு வேடன்.
?அரசே! என் பெயர் சருச்சரன். உங்கள் யுத்த தர்மப்படி பெண் பன்றியை நீங்கள் கொல்லாமல் இருக்கலாம். நானோ வேடன், எனக்கு எந்த மிருகமாக இருந்தாலும் ஒன்று தான். அந்த பன்றியைக் கொல்ல அனுமதிக்க வேண்டும், என்றான். மன்னனும் தலையசைக்க பெண் பன்றியைக் கொன்று விட்டான். தாயையும், தந்தையையும் இழந்த குட்டிப்பன்றிகள் காட்டில் அனாதையாகத் திரிந்தன. பாலில்லை, உணவில்லை, அவை பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல, பசியால் அவை கதறின. இவற்றின் அவலக்குரல் சுந்தரேசப் பெருமானின் காதுகளில் விழுந்தது. வராஹ முகத்துடனும், மனித உடலுடனும் கூடிய பன்றியாக உருவெடுத்து வந்தார். குட்டிகளுக்கு பாலூட்டினார். அவை பசி தீர்ந்து மகிழ்ந்ததுடன், முந்தைய வடிவையும் பெற்றன.
Recent Comments